தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு 31.10.2025 அன்று நான் மற்றும் என் தோழர் கண்ணன் ஆகியோர் புகார் அளிப்பதற்காக நேரில் சென்றிருந்தோம். அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் புகாரின் விவரங்களை விசாரிக்கத் தொடங்கினார்.
அப்போது, நான் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) அவர்களை நேரில் சந்திக்க விரும்புவதாக தெரிவித்தேன். அதற்கு, “DSP அவர்களின் அறையிலேயே உள்ளார், வாருங்கள்” எனக் கூறி எங்களை உள்ளே அழைத்துச் செல்ல முயன்றார். அந்த நேரத்தில், எங்கள் இருவரின் கைபேசிகளையும் வெளியே இருக்கும் மேஜையில் வைக்குமாறு கூறப்பட்டது.
அதற்கு நான், “DSP அவர்களை சந்திப்பதற்கு முன் கைபேசியை வைக்க வேண்டும் என்று கூறும் எந்த அரசாணை, விதிமுறை, சுற்றறிக்கை அல்லது போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர் (PSO) உள்ளதா?” என்று சட்டரீதியான கேள்வியை எழுப்பினேன். அந்தக் கேள்விக்கு எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை; முழுமையான மௌனம் மட்டுமே நிலவியது.
சட்டத்தில் குறிப்பிடப்படாத, அரசாணைகளில் இல்லாத நடைமுறைகளை அரசு அலுவலகங்களில் பின்பற்ற என்னால் இயலாது என்பதையும், சட்டத்தை அறிந்த என்னிடமே இப்படியான அணுகுமுறை காட்டப்படுகிறதே என்றால், பாமர மக்களும் விவசாயிகளும் எப்படி அதிகாரிகள் மீது புகார் அளிக்க முன்வருவார்கள்? என்ற கேள்விகளையும் முன்வைத்தேன்.
“உங்களிடம் அவர்கள் எப்படி நீதியை எதிர்பார்ப்பார்கள்? சட்டத்தை மதிக்காத நீங்கள், சட்டத்தை மீறுவோருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பீர்கள்?” என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, “கைபேசியை வைக்காமல் DSP அவர்களை சந்திக்க முடியாது என்றால், அத்தகைய சந்திப்பு எனக்கு தேவையில்லை. சட்டத்தின் வழியாக நான் அதிகாரிகளை சந்திக்க வேண்டிய முறையை எனக்கு தெரியும்” என்று தெரிவித்து, அந்த இடத்தை உடனடியாக விட்டு வெளியேறினேன்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு பின்னர் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அனுப்பினேன். அதற்கும் எந்த பதிலும் வரவில்லை. மேல்முறையீடு செய்த பின்னர், ஊழல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலர் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அதற்கு நான், “கைபேசியை வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் எழுத்து வடிவில் வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் அதற்கான விளக்கம் அளிக்க வேண்டிய நிலை வரும். தொலைபேசி வழியாக பேசுவதில் எனக்கு விருப்பமும் தேவையும் இல்லை” என்று தெளிவாகக் கூறி, அதனை வாட்ஸ்அப் செய்தியாகவும், பதிவு தபால் மூலமாகவும் அனுப்பினேன். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் விளக்கம் மற்றும் தகவல்களை கோரி விண்ணப்பித்துள்ளேன்.
இந்நிலையில், பதில் வருமா? அல்லது மனு கிடப்பில் போடப்படுமா? அல்லது எதுவும் தெரியாதது போல நடிக்கப்படுமா? என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
சட்டத்தில் கூறப்படாத நடைமுறைகளை பின்பற்ற வற்புறுத்தும், சட்டத்திற்கு மரியாதை இல்லாத இத்தகைய அணுகுமுறையுடன் செயல்படும் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை எவ்வாறு நேர்மையாக தங்களது கடமையை நிறைவேற்ற முடியும்? அவர்களை அணுகும் சாதாரண மக்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்விகள் எழுகின்றன.
எனவே, தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் என் கோரிக்கையை வைக்கிறேன்.
– மனித உரிமை ஆர்வலர்,
சட்ட ஆலோசகர்,
சட்ட நண்பன் இயக்கம்
VP சிங்.











