தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகள் – கடற்படையினரின் அதிரடி பறிமுதல்!
இலங்கை கடற்படையினர் கடத்தல் முயற்சியை தடுக்க அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், கடற்கரைக்கு அருகே சந்தேகத்திற்கிடமான பைபர் படகை தடுத்து சோதனை செய்தனர்.
அதில் 11 மூட்டைகளில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 405 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரு நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
முதற்கட்ட விசாரணையில், பீடி இலைகள் தமிழக கடல் எல்லையில் இருந்து கடத்தி வரப்பட்டவை என வெளிவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அந்நாட்டு சுங்கத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடத்தலில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் மற்றும் சுங்கத்துறை இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.











