சூலூரில் வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை!
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி விஜயலட்சுமி நகரைச் சேர்ந்த சிவசாமி (வயது 40), சூலூரில் உள்ள தனியார் கோதுமை ரவை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
சமீபத்தில் அவரின் உறவினர் மறைந்தது ஒரு வருடம் நிறைவடைந்ததால், அதற்கான சடங்குகள் நடத்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். வீடு பூட்டிய நிலையில் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வீடு திரும்பிய சிவசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, 5 பவுன் தங்க நகைகள், ரூ.50,000 ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் அனைத்தும் கொள்ளை போனது தெரியவந்தது.
சம்பவம் குறித்து சிவசாமி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிவசாமி வீடு திரும்புவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பே மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நுழைந்து கொள்ளையடித்தது பதிவாகியிருந்தது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, திருடர்களை அடையாளம் காண சூலூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.











