26/01/2026 – தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம், வர்த்தக ரெட்டிப்பட்டி பஞ்சாயத்தில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அரசுத் துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, புதுக்கோட்டை யூனியன் அலுவலகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர் (PDO), ஓவர்சியர் மற்றும் பஞ்சாயத்து கிளர்க் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த கிராம சபை கூட்டம் வர்த்தக ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரால் தலைமை தாங்கி நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகாரிகள் வராதது குறித்து கேட்டபோது, “அதிகாரிகளே என்னை கூட்டத்தை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்; கிராம மக்களின் குறைகளை என்னிடம் கூறலாம்” என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மாடசாமி என்பவர் கிராமத்தில் உள்ள அடிப்படை பிரச்சினைகள் மற்றும் குறைகளை எடுத்துரைத்தபோது, “அவற்றை நீங்களே சரி செய்ய வேண்டும்” என்று ஈஸ்வரமூர்த்தி பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக மாடசாமி தெரிவித்தபோது, “இன்று கிராம சபை கூட்டத்தை நான் தான் நடத்துவேன். யாரிடம் வேண்டுமானாலும் புகார் கொடு. என்னையும், எனக்கு அதிகாரம் கொடுத்த அதிகாரிகளையும் குறித்து புகார் செய்தாலும் உன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பதாக மாடசாமி தெரிவித்ததற்கு, “எங்கு புகார் கொடுத்தாலும் எங்களை உன்னால் எதுவும் செய்ய முடியாது” என ஈஸ்வரமூர்த்தி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ராமநாதபுரம் கிராமம் சார்பில் வழக்கறிஞர் சிவபெருமாள், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்கத் தவறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், அதிகாரமின்றி கூட்டத்தை நடத்தி மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் ஈஸ்வரமூர்த்தி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
ரா . கண்ணன் – சிறப்பு நிருபர் தூத்துக்குடி.











